தற்போது தென் கொரியாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார ரீதியாக நாட்டில் அவசரநிலை இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் சூங் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தென் கொரியாவில் இரண்டாவது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தெற்கு பகுதி நகரங்களான டேகு மற்றும் சேநோங்டோ ஆகியவை ''சிறப்பு பராமரிப்பு மண்டலங்களாக'' அறிவிக்கப்பட்டுள்ளன. டேகு நகரத்தின் சாலைகள் தற்போது பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தென் கொரியாவின் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைத்து ராணுவ நிலைகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக தென்கொரியா உள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, தென்கொரியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.